கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும் என்று விளம்பரம் செய்தார். அதை நம்பி வருபவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் வசூலித்தார். ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை பாதிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏற்கனவே டில்லி வாலிபரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் என்பது தெரிய வந்து உள்ளது. மோசடி செய்த ஜோஸ்வாவிடம் 20 க்கும் மேற்பட்டோர் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை இழந்து உள்ளது தெரியவந்தது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.