ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1.15. லட்சம் ரொக்க பணம் மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் செல்லும் சாலையில் மகிமைபுரத்தில் சிலர் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதை வஸ்து பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று
கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட
ரூ. 3 லட்சம் மதிப்புள்ள, 180 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி கடத்தி வந்தது. போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும், ரூ.1.15. லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(30), மற்றும் அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியைச் சேர்ந்த குமரன்(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.