திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த திருவரங்கம் அல்லி துறையை சேர்ந்த பாரதி (வயது 20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இதே போன்று திருச்சி ஓடத்துறை பாலம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்த சிந்தாமணி பகுதியை சேர்ந்த ரஷீத் பாஷா (வயது 27) விஸ்வநாத் (வயது 24 )ஆகிய இரண்டு பேரை கோட்டை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த குட்செட் ரோடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
