காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை காட்டப்பட்டதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது.
சொர்ண கணபதி தேர் முன்செல்ல, 2-வது சுப்பிரமணியர், 3-வது பெரிய தேரில் செண்பக தியாகராஜர், 4-வது நீலோத்பலாம்பாள், 5-வது சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன. காரைக்கால், திருநள்ளாறு, நாகை , கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர் , ‘தியாகேசா, தியாகேசா’ என விண்ணதிர பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.