திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டம், சென்னை, காஞ்சிபுரம் என 4 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது.
மணிக்கு 18 கி.மீ நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்றபடி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல டிசம்பர் 4-ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்றும், நாளையும், நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.