திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு திரும்புவார்.
நேற்று இரவு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அதே பேருந்தில் புதூர் உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் மகன் 39 வயதுடைய தொழிலாளி செல்வகுமார் என்பவரும் பயணம் செய்தார். அவர் இளம் பெண் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு, அந்த பெண்ணை நோக்கி ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை அந்தப்பெண் கண்டித்தார். அப்போது செல்வகுமாருக்கும் அந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இறுதியில் இருவரும் பஸ்சில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இது குறித்து அந்த பெண் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். அதன்பேரில் செல்வகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.