கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவத்தலத்தில், இன்று சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


இந்த விழாவையொட்டி, நந்தி பெருமானுக்குப் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நந்தி பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்தச் சிறப்பு வழிபாட்டில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்த சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

