Skip to content
Home » ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்…. ரங்கா..ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்…. ரங்கா..ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் வடம்பிடித்தனர்

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக  கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர்,பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும் பட்டித்தொட்டிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ம்தேதி நடைபெற்றது.  நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் திருக்கோவிலை வலம் வந்தார் – முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று  காலை கோலாலமாக நடைபெற்றது.

திருச்சி மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர் ,அரியலூர் ,தஞ்சை, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனின் திருத்தேரை காண நேற்று நள்ளிரவு முதல் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.

ரங்க ராஜா, ரங்கபிரபு, கோவிந்தா என்ற கோஷம் முழங்க  சிறப்பு அலங்காரத்தில்  நம்பெருமாள் எழில் மிகு தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேரில் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சரியாக 6மணிக்கு மேல் திருதேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.  ரங்கா,ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கங்கள் விண்ணதிர  பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.  4 சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வர உள்ளது.  தேரோட்டத்தையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தையொட்டி நம்பெருமாளுக்கு நேற்று   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து  சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!