தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி தங்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று இரவு சென்னை நந்தனம் ஒய்எம்.சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, எனது அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். ஸ்டாலின் அவர்களே இந்திய நாடு ஒரு நாள், உங்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு நுழைந்து உங்களை பார்த்து நீங்கள் தான் நாட்டுக்கு தலைமை தாங்க(பிரதமர் பதவி) வேண்டும் என்று சொல்லும் காலம் வரும் என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூர் அப்துல்லா, ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும், நாங்கள் அதற்கு பக்கபலமாக இருப்போம். அதற்கான தகுந்த நேரம் இது என்றார்.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் முடிந்ததும் பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து, முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது? எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம் என்றார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் பேட்டி அளித்த பரூக் அப்துல்லா, தமிழ்நாட்டை ஸ்டாலின் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய செய்துள்ளார். ஒரு பலமான இந்தியாவை கட்டமைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும் என்றார்.
2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான பரூக் அப்துல்லா வழிமொழிந்துள்ளது இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது மக்களவையில் வலிமையான கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. அடுத்த மக்களவை தேர்தலிலும் திமுக புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.