சென்னை எழும்பூரில் இன்று காலை திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழா நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி. * கொரோனா காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி போய் உதவியது . 2015ம் ஆண்டு, முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2015-ல் ஏரியை திறக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர். 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்து இருப்பார்கள். 2015 விட தற்போது அதிக மழை பெய்த போதிலும் மக்களை மீட்டுள்ளது திமுக அரசு. எப்போதுமே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி விடாமல் கண்காணிக்க வேண்டும்.
மழை பெய்யும் என்றார்கள், பலத்த மழை பெய்யும் என்றார்கள், காற்று வீசும், புயல் வீசும் என்றார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என யாரும் கணிக்கவில்லை. மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு வெள்ளம். கொடுமையான நிலை நீடித்தது. 47 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்தது. மழை வெள்ளம் ஏற்பட்டதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடின்றி உதவி செய்தோம்.
மழையால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும். மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினரே தமிழக அரசை பாராட்டியுள்ளனர். அந்த குழுவினர் சற்று நேரத்தில் என்னை சந்தித்து பேச இருக்கிறார்கள். எனவே நான் அங்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.