தரமற்ற கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர்பிரதாப் சிங், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் பஷீர் அஹமது அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது …
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட விமான நிலையம் அருகில் உள்ள விஎம்டி சாலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
பலநூறு மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வரும் மிகவும் முக்கியமான இந்த சாலை மிகவும் தர மற்றதாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலையில் சிமெண்ட் உதிர்ந்தும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் தூசி பறக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.
எனவே, தரமற்ற வகையில் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை அகற்றிவிட்டு, தரமான சாலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
