மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலந்துகொண்டு உணவக உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். வரக்கூடிய பண்டிகை காலத்தை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயார்
செய்யும் பொழுது அதிக சரியான முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் தவிர்த்து, வீடுகள் மற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை கண்டறிந்து முறையாக கண்காணித்து அவர்களையும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, பலகாரங்கள் தயார் செய்யுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் போன்று அவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.