தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் (எ) முருகையன் நேற்று இரவு இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் விஎஸ்எல். குமார் (எ) முருகையன் (50). இவர் வழக்கமாக திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து இரவு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்புவது வழக்கம். அதுபோல் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் திருவையாறு – கல்லணை சாலையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு மேற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரது வாகனத்தில் மோதியதில் குமார் தடுமாறி சாலையின் தென்புறம் விழுந்தார்.
மர்ம நபர்கள் அவரை காலில் சரமாரி வெட்டியதில் குமார் (எ) முருகையன் நிலை தடுமாறி குப்புற விழுந்தார். அதைத்தொடர்ந்து பின்னந் தலையில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மூளைப்பகுதி சிதறி குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தோகூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை தஞ்சை காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பார்வையிட்டார். திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர்கள் அய்யாப்பிள்ளை, கோவிந்தராஜன் உள்ளிட்டோர் இது குறித்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குமார் (எ) முருகையன் திருச்சி இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளவர் என்றும், ரவுடி லிஸ்டில் உள்ளதாகவும் தோகூர் போலீசார் தெரிவித்தனர்.