தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார்.
அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர், அசோக்குமாரிடம் சாலையை மறித்துக்கொண்டு இருப்பதாக கூறி தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திரும்பி சென்று மேலும் சிலரை அழைத்து வந்து அசோக்குமார், முனியாண்டி உள்ளிட்டோரை கட்டையால் தாக்கினர். இதில் அசோக்குமாருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், படுகாயமடைந்த முனியாண்டி தஞ்சாவூர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நேற்று தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அருண்மொழிப்பேட்டையை சேர்ந்த ஆகாஷ், பாலமுருகன்,பாலகுமார், விஜய் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மாரியம்மன்கோவில் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.