அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த திங்கள் கிழமை 13ந்தேதி ஐயனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து 14 ந்தேதி செல்லியம்மன் மாரியம்மனுக்கு காப்பு கட்டி நாள் தோறும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை மாலை இரண்டு வேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவில் ஐந்தாம் நாள் மாதிரிதேர் விழாவும் ஏழாம் நாள் பூந்தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமமக்கள் தேர்கட்டும் பணியில் ஈடுபட்டனர். கூலி ஆட்கள் இல்லாமல் சிறுகடம்பூர் கிராமமக்களே இணைந்து தேரின் அனைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தேரினை இழுத்து செல்வது இந்த ஊர் தேர்த் திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும்.
அதன்படி தேர் கட்டுமானப் பணிகள் முடிந்து தேர் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி ,மா, பலா ஆகியவற்றை கையிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர்.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியமனையும் மாரியம்மனையும் அருகருகே தேரில் ஏற்றி அமர்த்தினார்கள். அதன் பின்னர் தேர் பொது மக்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் சன்னதியில் இருந்து சிறுதேரில் விநாயகர் முன்னே செல்ல புறப்பட்ட தேர் பிள்ளையார் கோயில் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று மாலை சந்நிதியை திருத்தேர்கள் வந்தடையும்.தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணமும், பெண்கள் நடை கும்பிடு போட்டும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துவார்கள். திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.