புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு சிறிய ரக சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) சென்றுள்ளது. அப்போது புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி திசையில் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மீது மோதியதில் அந்த டாடா ஏஸ் வாகனம் அதற்குப் பின்னால் வந்த முருகன் என்பவர் ஒட்டி வந்த காரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி திசையில் சென்ற காரில் பயணித்த தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா மற்றும் டாடா ஏசி வாகனத்தில் ஓட்டுநர் அருகே அமர்ந்து பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்புரை சேர்ந்த சுதாகர் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண்மணி,டாடா ஏஸ் வாகனம் ஓட்டுநர் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி காரை ஒட்டி வந்த முருகன் எந்தவித காயமுமின்றி உயிர்த்தப்பினார்.
மேலும் விபத்து நடந்த உடனே உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நமணசமுத்திரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கார் மற்றும் டாடா ஏசி வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர்களது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கிரேன் உதவியுடன் விபத்து நடந்த வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி திசையில் சென்ற கார் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் மேலும் இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.