Skip to content
Home » தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Senthil

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு

கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்த நிலையில் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் லாரிகளில் ஏற்றி தஞ்சாவூர் ரயில் மற்றும் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. இதில் தஞ்சாவூரில் இருந்து தர்மபுரி, கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!