விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன் மது போதைக்கு அடிமையானதால் மது அருந்திவிட்டு மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். கணவனிடம் சண்டையிட்டு விட்டு வழக்கம்போல் நவமால்காப்பேர் பகுதியிலுள்ள கரும்பு தோட்டத்திற்கு மலர் பணிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த பாண்டியன் அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மலரை பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மலரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய பாண்டியனை தேடி வருகின்றனர்.