ஆறுமுகநேரியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் தெரு, பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ராயப்பன் (27). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தனியார் லாட்ஜில் அறையெடுத்துத் தங்கி, சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மதுபோதையில் தனது அறைக்கு வந்த ராயப்பன், கதவை உட்புறமாகப் பூட்டியுள்ளார். இன்று காலை வரை அறைக்கதவு திறக்கப்படாத நிலையில், மாலை நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் ஜான்சன், அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அறைக்குள் இருந்த மின்விசிறியில் காவித் துண்டால் தூக்கிட்ட நிலையில் ராயப்பன் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராயப்பனின் உடலில் எந்தவித வெளிக்காயங்களும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், அவர் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரித்தும் ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
