திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் அப்பு(27). காய்கறி மொத்த வியாபாரி. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக வேனில் நேற்று நள்ளிரவு திருச்சி வந்து கொண்டு இருந்தார். வேனை வினோத் என்பவர் ஓட்டினார்.
நள்ளிரவு 12 மணி அளவில் வேன் தஞ்சை மாவட்டம் வல்லம் பைபாசில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த ஒரு பைக் ஓவர்டேக் செய்து வேனை வழிமறித்தது. டிரைவர் வேனை நிறுத்தியதும் அப்பு வேனில் இருந்து இறங்கினார். அப்போது பைக்கில் இருந்த 2 பேரும் அப்புவை சரமாரி வெட்டித்தள்ளினர். இதனால் கொஞ்சமும் எதிர்பாராத அப்பு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து இறந்தார்.
பின்னர் 2 பேரும் பைக்கில் தப்பி ஓடினர். வேனை ஓட்டிவந்த வினோத்துக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தடுக்க முயன்றபோது காயம் ஏற்பட்டதாக கூறினார். தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வினோத்திடம் போலீசார் விசாரிக்கிறார்கள். கொலையாளரிகள் யார், எப்படி இருந்தார்கள். அவர்கள் வந்த பைக்கில் எண் என்ன என்பது குறித்து விசாரிக்கிறார்கள்.
அப்பு காய்கறி வாங்க வருவதை அறிந்து கொலையாளிகளும் நீடாமங்கலத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம். காதல், தொழில் போட்டி, சொத்து தகராறு என யாரிடமாவது அப்புவுக்கு பகை இருந்ததா என போலீசார் விசாரிக்கிறார்கள். எனவே கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தொிகிறது.