திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.அதை சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண்மணி, அனுப்பி இருந்தார்.
அதில், திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என எச்சரிக்கும் வகையில் மெசேஜ் இருந்தது.இதனால் விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்த தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகளின் பரபரப்பை பார்த்த பயணிகள் ஏதோ ‘சம்திங் ராங் ‘என்பதை மட்டும் புரிந்து கொண்டனர்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடனும், வெடிகுண்டு நிபுணர்களுடனும், விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் வாட்சப் மெசேஜ் அனுப்பிய சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சங்கீதாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.
எனவே அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எ போலீசார் எச்சரித்தனர். அவரது குடும்பத்தாரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்து கவனமுடன் நடந்து கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டது.