திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை, தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் மாநகர மேயருமான அன்பழகனிடம் மனு அளித்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்து கருப்பு கொடி ஏற்றி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்ய முயற்சித்தனர் . ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை . எனவே மேயர் அன்பழகன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தேர்தல் நேரத்தில் எப்படி குடிநீர் பிரச்னையை தீா்க்கும் நடவடிக்கையில் மேயர் ஈடுபடலாம்? இது தேர்தல் விதிகளுக்கு முரணானது எனக்கூறிய சில பாஜகவினர் கலெக்டர் தான் வரவேண்டும். திமுகவை சேர்ந்த மேயர் வரக்கூடாது என தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதி திமுகவினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தாசில்தார் வந்து அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். துணை ராணுவமும் அங்கு வந்தது.பாஜகவினரின் இந்த போராட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது உங்க கட்சிக்கு பிடிக்கவில்லையா? தேர்தல் நேரத்திலேயாவது தண்ணீர் கிடைக்குமுன்னு பார்த்தோம். அதையும் தடுக்க வந்திட்டீங்க என்று ஆவேசப்பட்டனர்.