Skip to content
Home » திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் மற்றும் கிராம சபை கூட்டத்திலும் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லால்குடி அன்பில் சாலையில் காலி குடங்களுடன் 150 க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் என அனைவரும் அவதியுற்றனர்.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வழங்க உத்திரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபொழுது மின்மோட்டார் பழுதடைந்துள்ளதால் குடிநீர் வழங்கவில்லை, எனவும் மின்மோட்டார் சரியான உடன் குடிநீர் வழங்கப்படும் என கூறினார். சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த லால்குடி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!