திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலை திருச்சி நகரின் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறிவிட்டது. காரணம் தேசிய கல்லூரியில் இருந்து பிராட்டியூர் வரை ஆங்காங்கே சாலைப்பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டு புதிதாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் நெடுஞ்சாலையிலும் பாதாள சாக்கடைக்கு சாலைகள் தோண்டப்பட்டதால் தேசிய கல்லூரி அருகிலும், கருமண்டபம் பால்பண்ணை அருகிலும் இருவழிப்பாதை, ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையிலும், திருச்சி நோக்கி வரும் சாலையிலும் தினமும், காலை மாலை வேளைகளில்100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.
இது தவிர பொது போக்குவரத்து பஸ்கள், தனியார் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என இந்த பகுதியில் வாகன அணிவகுப்பு நடக்கிறது. இந்த நேரங்களில் பொதுமக்கள் சாலையை கடக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு வாகனங்கள் பேரணி போல
தொடர்ந்து ஊர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அவசர பணிக்காக கூட சாலையின் மறுமுனைக்கு செல்ல முடிவதில்லை. அப்படி யாராவது குறுக்கே வந்தால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த வாரம் கூட ஒரு முதியவர் இந்த பகுதியில் டூவீலர் மோதி உயிரிழந்தார். இதற்கு காரணம் 3 மாதமாக நடைபெற்று வரும் சாலை பணி தான். சாலை பணி முடியும் வரையாவது இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம். அதையும் செய்வதில்லை. மாநகர பகுதியிலேயே போலீசார் இதனை கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியான போக்குவரத்து நடந்து கொண்டிருக்கும் பகுதியில் தான் போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. அங்கு பணியில் இருக்கும் போலீஸ்காரர்கள் கூட இந்த நெரிசல் மிகுந்த போக்குவரத்தை கண்டுகொள்வதில்லை. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். அப்போதும் போலீசார் தூரத்தில் நின்று இதை ரசிப்பார்களே தவிர வந்து போக்குவரத்தை சரிசெய்வதில்லை. கடந்த 3 மாதமாக இந்த துயரமான காட்சிகள் தான் நடந்தேறுகிறது. இனியாவது போக்குவரத்து போலீசார் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கருமண்டபம் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.