Skip to content
Home » திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முத்துக்குமார் (வயது 29) என்ற மகன் உண்டு. இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு, இந்த தொழிலை செய்து வந்தார்.

பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் மூத்த சகோதரர் பெரியசாமியின் குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக தொடர்ந்து முன்விரோதம் இருந்து வருகிறது. தொழில் போட்டியில்  சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் பழிக்குப்பழி என கொலை சம்பவங்கள் தொடர்ந்தன.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் நேற்று காலை முத்துக்குமார், பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து  தனது பைக்கில் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல்,  முத்துக்குமாரை துரத்தியது. நிலைமையை புரிந்து கொண்ட முத்துக்குமார் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தியது.  ஓட ஓட அவரை விரட்டி சென்ற அந்த கும்பல், ஒரு டீக்கடை அருகே சென்றபோது  முத்துக்குமாரின் முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

தகவல் அறிந்த  அரியமங்கலம் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து  முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைதொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அரியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!