திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவரது மனைவி மாலதி ரவிச்சந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது.
பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சிலரை தேடி வருகிறார்கள்.