சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு லால்குடி அடுத்த வாளாடியை கடந்து பிச்சாண்டார் கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணி இருக்கும். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் ஒரு லாரி டயரை வைத்திருந்ததை இன்ஜின் டிரைவர் பார்த்துவிட்டார். ரயில் வேகமாக வந்துகொண்டிருந்ததால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியாவில்லை. இதனால் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த லாரி டயர் மீது ரெயில் வேகமாக மோதியது மோதியதில் டமார் என சத்தம் கேட்டது. இதனால் தூங்கிகொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது கன்னியாகுமரி விரைவு ரெயிலின் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் மின் இணைப்பை சீரமைத்தனர். மின் இணைப்பு சீரமைக்கப்பட்ட பின் 30 நிமிடம் தாமதமாக கன்னியாகுமரி விரைவு ரெயில் புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தண்டவாளத்தில் லாரி டயரை வைத்தது யார்? என திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் திருச்சி ரெயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் விசாரணை நடத்தினார். லாரி டயர் மீது கன்னியாகுமரி விரைவு ரெயில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசவேலைக்காக இந்த டயர் வைக்கப்பட்டதா, அல்லது குடிபோதையில் யாரும் அங்கு போட்டு விட்டு போய்விட்டார்களா என போலீசார் விசாரிக்கிறார்கள்.