இந்தியா முழுவதும் கடந்த 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 1200 இடங்களுக்கு மேலாக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக திருச்சி மாநகரத்தில் 306 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக அனைவரும் காவேரி பாலத்தில் விநாயகர் சிலையை
கரைக்க வந்தனர். முன்னேற்பாடாக காவிரி ஆற்றின் பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.
குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர். எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நூற்றுக்கும்
மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பிள்ளையார் சிலைகளை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றில் அமைதியாக கரைத்து விட்டு கோஷங்களை எழுப்பி விட்டு சென்றனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவேரி பாலத்தில் கூடியதால் திருச்சி காவேரி பாலம் விழாக்கோலம் பூண்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 1850 போலீசார் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.