மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தனது காதலனுடன் அங்குள்ள ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி திபன்கர் அதிகாரி வந்துள்ளார். திபன்கரும் சிறுமியின் காதலனும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
அங்கு வைத்து சிறுமியின் காதலனும், திபன்கர் அதிகாரியும் சேர்ந்து அந்த சிறுமியைத் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர் அதிகாரி மற்றும் சிறுமியின் காதலன் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஆளுங்கட்சி நிர்வாகியே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

