கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் கோவை ரோடு, என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா, தனது பெற்றோர்களை சந்திப்பதற்காக கரூரிலிருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
அப்போது நொய்யல் அருகே வேட்டமங்கலம் பத்ரகாளியம்மன் நகர் பகுதியில், தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர், பிரியாவின் அருகே வந்து அவரது கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் சுதாரித்துக் கொண்ட பிரியா, ஸ்கூட்டரை இடதுபுறமாக இயக்கியுள்ளார். அப்போது மர்ம நபரின் கை அவரது கழுத்துப் பகுதியில் விழுந்ததாகவும், சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றதால் செயினை பறிக்க முடியாமல் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி அருகேயுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில், புகளூர் நகர தமிழக வெற்றி கழக செயலாளர் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
