கோவை மாவட்டம், வால்பாறைக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .இந்நிலையில் இன்று மாலை வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீர் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. இவர்களுடன் சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆற்றின் நடுப்பகுதியில்
அமைந்துள்ள திட்டில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றீல் வெள்ளம் வருவதைக் கண்ட ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ராமச்சந்திரன் அமர்ந்திருந்த திட்டை சுற்றி வெள்ள நீர் வளைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் உள்ள தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.