சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று காலை தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொலிஜியம் பரிந்துரைத்த 48 மணி நேரத்தில் 2 நீதிபதிகளும் பதவியேற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது.
இவர்களில் கே.வி. விஸ்வநாதன் கோவையை சேர்ந்தவர். இவர் வரும் 2030ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. கே.வி. விஸ்வநாதன் கோவை சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பை பயின்றார், கடந்த 1998 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். குற்றவியல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம் உள்பட பல்வேறு சட்டம் சார்ந்த வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதாடி வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்க இருக்கும் கேவி விஸ்வநாதன் வரும் 2030ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. இவருக்கு முன்னதாக இவரது சீனியர் ஜே.பி.பார்த்திவாலாவின் பதவிக்காலம் 2030ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. கே.வி.விஸ்வநாதனின் பணிக்காலம் 2031ம் ஆண்டுதான் நிறைவடையும். எனவே சீனியாரிட்டி அடிப்படையில் கேவி விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்க வாய்ப்பிருக்கிறது. கேவி விஸ்வநாதன் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வந்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் 3வது தமிழர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதற்கு முன்னர் பதஞ்சலி சாஸ்திரி, பி.சதாசிவம் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர்.