சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது 9,035 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைக் கடந்து 90.92 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் நீர் இருப்பு 53.708 டி.எம்.சியாக உள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் 17.6 டி.எம்.சி. நீர் திறக்கவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
