கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரில் மோதி சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் அரங்கேறி உள்ளது.
காண்போர் நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மின்னல் வேகத்தில் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த கோரக் காட்சி இப்பகுதி வாகன ஓட்டிகளை உறைய வைத்து உள்ளது.
அப்போது அந்த சாலையில் அருகில் நின்று கொண்டு இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது. லாரி கவிழ்ந்த வேகத்தில் அந்த இரண்டு வாகன ஓட்டிகளும் தூக்கி எறியப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினர்.
இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி ஓட்டுநரின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கியக் அமைந்து உள்ளது சி.சி.டி.வி பதிவான காட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும் லாரியில் வேறு ஏதேனும் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா ? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
