வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி என்ற இடத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இந்த இயற்கை பேரிடருக்கு மனித தவறே முக்கிய காரணம் என மாநில அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல் மலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2024ல் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள், விடுதிகள், உணவகங்கள் மண்ணில் புதைந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரிடர் ஏற்படுத்திய துயரத்தில் இருந்து வயநாடு மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின், வயநாடு மாவட்டத்தில், முண்டக்கை, சூரல் மலை அருகே உள்ள மேப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.
கல்லாடி என்ற இடத்தில் கோழிக்கோடு – வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்க சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கனமழையால், கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மண்ணில் புதைந்த 10 பேரை மீட்டு, மேப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அருகே வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 5 பேர் மண்ணில் புதைந்ததாக அஞ்சப்படும் நிலையில், மோப்ப நாய் உதவியுடன் அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி கூறுகையில், ”சுரங்க சாலை அமைக்கும் பணி நடந்த இடத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்டபோது, பொறியாளர்களும், செக்யூரிட்டி ஊழியர்களும் தான் இருந்தனர். இதனால், அவர்கள் மண்ணில் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
