மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர கமல்சிங் (25). இவர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த புஷ்பதேவி (20) என்ற இளம்பெண்ணுடன் கமல்சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்த நிலையில் கடந்த 3 மாதங்களாக லிவ் இன் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 29ம் தேதி இரவு காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கமல்சிங் வீட்டில் இருந்த மரக்கட்டையால் புஷ்பதேவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த புஷ்பதேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புஷ்ப தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று லிவ் இன் காதலியை அடித்துக்கொன்ற கமல்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமல்சிங் இன்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கமல்சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

