திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (35). இவர்களுக்கு ஹரிகரன் (6) என்ற மகனும், குகஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஆண்டு பெரியார் நகர் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து சுதாகர் உயிரிழந்தார்.
கணவன் உயிரிழந்ததை மறக்க முடியாமல் கடந்த ஓராண்டுகளாக கவுதமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து கவுதமி தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த கவுதமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை கவுதமி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர்களது 2 குழந்தைகளும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர்.
