Skip to content
Home » கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்பு…. பொதுமக்கள் முற்றுகை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கிழக்கு காலணி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தினை தனி ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையினையும் ஆக்கிரமித்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர சிரமப்பட்டனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், பேரூராட்சி சொந்தமான இடத்தினை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது நீதிமன்றம் இந்த வழக்கில் ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து நேற்று போலீசார் வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பின் இடத்தினை அளப்பதற்காக கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதிக்கு வந்தனர்.

சர்வேயர் மூலம் பேரூராட்சியில் சொந்தமான 14 சென்ட் நிலம் அளக்கப்பட்டு கல் ஊன்றப்பட்டது. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பினை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே இரண்டு நாட்களுக்குள் அகற்ற

வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஜேசிபி எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பினை அகற்றுவதாகவும் வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி துறையினர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்ற போது அங்கிருந்து பொதுமக்கள் பேரூராட்சி சொந்தமான இடத்தினை மீட்டு அளந்து கல் ஊன்றப்பட்டது போல் பொதுமக்கள் இப்பகுதியில் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மீட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு உடனே கொண்டு வர வேண்டும் என கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொது பாதையை விரைவில் மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமாதானம் ஆகி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!