18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதில் முதல்கட்டத்தேர்தல் இன்று102 தொகுதிகளில் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களில் 8.4 கோடி பேர் ஆண்கள். 8.23 கோடி பேர் பெண்கள். 11,371 பேர் மூன்றாம் பாலினத்தினர். முதல் முறை வாக்காளர்களாக 35.67 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக 3.51 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். போட்டியில், 1625 (ஆண்கள் 1491, பெண்கள் 134) வேட்பாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 39 தொகுதி்களில் சுமார் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இருந்து 39 பேரை தேர்வு செய்ய இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல், ரஜினி, அஜீத், விஜய், சரத்குமார், பிரபு, தனுஷ் , நடிகர் சிவக்குமார், கார்த்தி, நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் , மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்கள், முதல் வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும். அதன்படி காலை 11 மணி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
முன்னிலை வாரியாக தொகுதிகளின் நிலவரம் இங்கே (சதவீதத்தில்)கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி 26.58, திண்டுக்கல்26.34, நாமக்கல் 26.07, கரூர் 26.07, சேலம் 25.97, விழுப்புரம் 25.69, தர்மபுரி 25.66, பெரம்பலூர் 25.62, ஆரணி 25.53, திருப்பூர் 25.47, விருதுநகர் 25.39, ஈரோடு 25.37, சிதம்பரம் 25.35, பொள்ளாச்சி25.02, தேனி24.99, தஞ்சை 24.96, திருவள்ளூர் 24.93, திருவண்ணாமலை 24.92, நாகை 24.92, கிருஷ்ணகிரி 24.82, மயிலாடுதுறை 24.76, அரக்கோணம் 24.71, திருச்சி 24.7, கன்னியாகுரி 24.68, வேலூர்24.67, கடலூர் 24.66, காஞ்சிபுரம்24.65, கோவை24.54, தென்காசி24.51, சிவகங்கை 24.47, தூத்துக்குடி 24.16, நீலகிரி 24, ராமநாதபுரம்23.89, திருநெல்வேலி 23.78, திருப்பெரும்புதூர் 23.53,
மதுரை22.73, வடசென்னை 22.05, தென் சென்னை 21.97, மத்திய சென்னை 20.09.
அதிகாரிகள், கல்வியாளர்கள் நிறைந்த சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வெயில் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடிகளில் பந்தல் போடப்பட்டு, குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த இருவருர் மயங்கி விழுந்து இறந்தனர். கெங்கவல்லியில் சின்னப்பொண்ணு(77) என்ற மூதாட்டியும் சேலம் சூரமங்கலத்தில் பழனிசாமி(65) என்பவரும் இறந்தனர். மதியம் வரை கிடைத்த தகவல்படி தமிழ்நாட்டில் அமைதியாக , விறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் தேர்தலை புறக்கணித்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.