கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவக் கிராமத்தில் இன்று காலை திடீரென வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்றவர்கள் மற்றும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து கடித்தது.
மணக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய், கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓடி ஓடி கடித்தது. இதனால் மக்கள் பயந்து கொண்டு சிதறி ஓடினர்.
இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். சிலருக்குக் கைகள் மற்றும் கால்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாதிக்கப்பட்ட 12 பேருக்கும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் ‘ஆன்டி ரேபிஸ்’ (Anti-Rabies) தடுப்பூசி மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பலத்த காயமடைந்த சில குழந்தைகள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

