மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள். இன்று அதிகாலை சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ராதாநல்லூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
பைக் மோதிய வேகத்தில் மின்கம்பம் முற்றிலும் உடைந்தது. பைக்கில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த காளிதாஸ்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி அறிந்த டிஎஸ்பி ராஜ்குமார் ,ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, இறந்துபோன இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர். மேலும் இந்தவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சின்னங்குடி பகுதியில் நடைபெற்று வரும் இரவு நேர கபடி போட்டிக்கு மூன்று பேரும் சென்றனர். போட்டி முடிந்ததும் அங்கேயே தங்கிவிட்டு இன்று அதிகாலை தூக்க கலக்கத்தில் சின்னங்குடி பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊரான திருமுல்லைவாசல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது.