திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (60) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதேபோல், திருச்சி நவல்ப்பட்டு மற்றும் மணிகண்டம் பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் பிடிபட்டனர்.
குண்டூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ‘ஹான்ஸ்’ புகையிலை விற்ற திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (26) என்பவரை நவல்ப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
ஆலம்பட்டி டாஸ்மாக் கடை அருகே புகையிலை விற்ற நாகமங்கலத்தைச் சேர்ந்த சிவா (36) என்பவரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் அந்தந்த காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
