நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் நேற்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தபோது, அவருடைய தாத்தா இளங்கோ(75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் இணைப்பு வந்ததை அடுத்து முதியவர் இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியுள்ளார்.
முதியவர் இளங்கோ தூக்கியெறிந்த மின்வயர் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்து ஏற்பட்ட மின் விபத்தில் சிறுவன் கோகுல் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாத்தா இளங்கோ வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்து கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயதே ஆன சிறுவன் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவமும், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் காமேஷ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.