ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர் காளீஸ்வரன் (36). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜன.16ம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் காளீஸ்வரனை கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில் சிறுமிக்கு காளீஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், குற்றம் நிரூபிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி மீனவர் காளீஸ்வரனுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.