Skip to content

ரோடு இல்ல, தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் முற்றுகை: முசிறி எம்.எல்.ஏ. அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியின்  எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன்.  இவர் திருச்சி வடக்கு மாவட்டத்தின்  திமுக செயலாளராகவும் இருக்கிறார்.  பொதுவாக திமுகவில் தற்போதுள்ள  எம்.எல்.ஏக்களில் 50 சதவீதம் பேருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்ற பேச்சு  அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பாய் பேசப்படுகிறது. இதனாலோ என்னவோ….   எந்த எம்.எல்.ஏவும்  தொகுதி பக்கம் போவதில்லை.

அதில்  முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜனும் விதிவிலக்கல்ல. 

இந்த நிலையில் தான் நேற்று  காடுவெட்டி தியாகராஜன்,   முசிறி அடுத்த வெள்ளூர் கிராமத்திற்கு  தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவுக்கு  சென்றுள்ளார்.  வழக்கம் போல தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துக்கொண்டு போனார்.

எதிரே  50 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் அந்த கிராமத்தில் திரண்டிருந்தனர்.  அவர்கள் விழாவுக்கு வந்தவர்கள் என நினைத்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் எம்.எல்.ஏவை கேள்வி கேட்க வந்தவர்கள் என்பது  பின்னர் தான் தெரியவந்தது.

2021 தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தீங்க, அதற்கு அப்புறம்  இப்பத்தான் வந்திருக்கீங்க என்று ஒரு  பெண்  தனது எதிர்ப்பு குரலை  உயர்த்தினார். அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள்  சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

ஓட்டு கேட்டு வந்தபோதே, எங்க கிராமத்துக்கு ரோடு போட்டு தருவேன் என்றீர்கள். இப்போது தான் ரோடு பணிக்கு பூஜை போட வந்திருக்கிறீர்கள். அடுத்த தேர்தலுக்காக இப்போது வந்திருக்கிறீர்கள்

தெரு விளக்கு இல்லை,  சுகாதார வளாகம் கட்டி 2 வருடமாச்சு,   ஆனால் அங்கு  தண்ணீர் வசதி செய்யப்படாததால், அது பயனற்று கிடக்கிறது. காவிரி கரை ஓரம் உள்ள கிராமத்தில் கூட தண்ணீர் வசதி செய்ய முடியல.  குடிநீர் வசதியும் கிடையாது….. இப்படியாக ஆளுக்கு ஒரு குறை என சரமாரியாக குறைகளை கூற, எம்.எல்.ஏவுக்கு அதிர்ச்சி.

எம்.எல்.ஏ.வும், அவருடன் வந்தவர்களும் பொதுமக்களை நன்றாக சமாளித்தனர். நாளைக்கே பிரச்னை தீர்த்துவிடுவோம் என்ற ரீதியில் மீண்டும்  வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பூமி பூஜையையும் முடித்துக்கொண்டு திரும்பினார் காடுவெட்டி தியாகராஜன்.

 

error: Content is protected !!