பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும், கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாமகவினர் என்பக்கமே உள்ளனர். கட்சியை வளப்படுத்த அன்புமணி உழைக்க வேண்டும். அதற்கு அவர் தயாராக இல்லை. தேர்தல் வரை நான் தான் கட்சித்தலைவர். அமைச்சர் பதவி உள்ளிட்ட எதையும் நான் எதிர்பாாக்கவில்லை. கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கமாட்டேன். அப்படி செய்ய நான் என்ன முட்டாளா?
அனைத்து சாதியினரும் முன்னேற பாடுபட்டு வருகிறேன். அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது. பாமக பொதுக்குழுவை எப்போது கூட்ட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். பொதுக்குழு தான் அடுத்த தலைவரை முடிவு செய்யும்.
அன்புமணியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக கருதுகிறேன். பேரன், பேத்திகளை பார்த்துக்கொண்டு கதவை அடைத்துக்கொண்டு என்னால் வீட்டுக்குள் இருக்கமுடியாது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டு தலைவராக இருக்க எனக்கு உரிமையில்லையா, இப்படி கேட்பதே எனக்கு அவமானம். என்னை கழுத்தை பிடித்து தள்ளும்அளவுக்கு நிலை உள்ளது.
அன்புமணி பொறுமை காத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தேர்தலுக்கு பிறகு அவர் பொறுப்பை எடுத்துக்கொள்ளட்டும். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது. என் உயிரை விட பாமக தொண்டர்களை நேசிக்கிறேன்.
என் கை விரலைக்கொண்டே என் கண்ணை குத்திக்கொள்கிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அவரிடம் இருந்தது. என்னை நடைபிணமாக ஆக்கிவிட்டு அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறார். தவெகவுடன் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. என்னை குலசாமி என்று கூறிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள். அய்யா என சொல்லிக்கொண்டு அவமானப்படுத்துகிறார்கள்.
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை காணவில்லை. அவரை கடத்திச்சென்று 7 நட்சத்திர விடுதியில் வைத்திருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு தரப்படும். நீயா, நானா என பார்த்துவிடுவோம் என்று தான் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்னையின் பின்புலத்தில் பாஜக இருக்கிறதா என்று கேட்டபோது அப்படி யாரும் இல்லை என்றும் ராமதாஸ் கூறினார். எங்கள் பிரச்னையை 2 பேர் சமரசம் செய்கிறார்கள். ஆனாலும் பேச்சுவார்த்தை டிராவாகி விட்டது என்றும் கூறினார்.
