Skip to content

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாநில நெடுஞ்சாலைத்துறை வாகனங்கள் மேம்பாலத்தின் தூண் ஒன்று உடைந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். அதன் பின்னர் உடைபட்ட கான்கிரீட் தூண் சாலையில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரிகள் குழு விபத்து ஏற்பட்ட பகுதியை இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ மேம்பால பணி இயக்குனர் அர்ஜுன், “மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை துறை மேம்பாலத்தின் ஒரு தூண் விழுந்துள்ளது. இந்த தூண் பொருத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. அதற்கு பக்கபலமாக A வடிவ இரும்பு உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரும்பு உபகரணம் பொருத்தப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டு இந்த விபத்தானது ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்திற்கு காரணம் உலோகத்தின் உறுதித் தன்மை இழப்புதான். இதேபோன்று வேறு ஏதேனும் உறுதி தன்மையில் பிரச்சனை இருக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பிறகு அனைத்து இணைப்புகளிலும் உறுதி தன்மையை அதிகரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம். எனவே இனிமேல் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது வரை நடவடிக்கையாக ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக மற்றொரு நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!