Skip to content

ஆள் கடத்தல்: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும் கைதாகிறார்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதை விரும்பாத வனராஜா, தனதுமகளை மீட்க திட்டமிட்டார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.

கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை அவசர மனுவாக விசாரிக்குமாறு கடந்த ஞாயிறன்று முறையிடப்பட்டது. ஆனால், மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

அதன்படி, நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெகன்மூர்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘‘இந்த வழக்குக்கும், ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், ‘‘சிறுவன் கடத்தல் சம்பவம் நடந்தபோது, முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும், ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவும் பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பேசியுள்ளனர். கடத்தலுக்கு ஏடிஜிபி டிஜிபி ஜெயராம் தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். போலீஸார்தான் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளனர். இந்த கடத்தலில் அதிக அளவில் பணம் கைமாறியுள்ளது. ஜெகன்மூர்த்தியை விசாரித்தால் உண்மைகள் தெரியும்’’ என்றார்.

இதையடுத்து, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமும் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகநீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராம் 2.30 மணிக்கு ஆஜரானார். வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த ஜெகன்மூர்த்தி 3.45 மணிக்கு ஆஜரானார். அப்போது, எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி வேல்முருகன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதன் விவரம்: உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான்ஆஜராக உத்தரவிட்டேன். ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா. 2 பேர் காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா.சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள்.

எம்.பி., எம்எல்ஏ, போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. (அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி) இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை. உயர் அதிகாரிஎன்பதால் காப்பாற்ற நினைக்கிறீர்களா. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். அதேபோல, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏடிஜிபி ஜெயராமை உயர் நீதிமன்றத்திலேயே போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜெயராம் இன்று  சஸ்பெண்ட் செய்யப்படுவார். அதைத்தொடர்ந்து அவரை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.  ஜெகன்மூர்த்தி மீது  போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே அவரையும் விசாரணைக்கு அழைத்து  போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்த விசாரணை திருத்தணி, அல்லது திருவாலங்காட்டில் நடத்துவது குறித்து  போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் ஜெகன்மூர்த்தியும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது-

 கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கர்நாடகாவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.எம்.ஏ., எம்.பில் படித்தவர். 1996 பேச் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பொறுப்பேற்றார். நாமக்கல், தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் ஆரம்பகால பணியை தொடங்கிய ஜெயராம், தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திறம்பட பணி செய்பவர், அனைவரிடமும் சகஜமாக, எளிமையாக பழகக்கூடியவர் என்று பெயரெடுத்த ஜெயராம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!