அரியலூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு திடீரென குறுக்கே வந்த பசுமாடு ஒன்றின் மீது கார் மோதியதில், பசு நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் 8 மாதம் கருத்தரித்திருந்த பசுமாடு கீழே விழுந்தது காயம் அடைந்தது. காரின் முன்பக்கம் சேதமடைந்தது. பசுவால், எழுந்து கூட நிற்க இயலவில்லை. கீழே கிடந்த பசுவைக் கண்டு சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாயில்லா ஜீவனான பசுவிற்கு உதவும் பொருட்டு சில நல்ல உள்ளங்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி பசுவை தூக்கி நிறுத்த முயன்றனர். பசு மூச்சு விடக்கூட சிரமப்பட்டு கீழேயே கிடந்தது. இதனைக் கண்ட திலீபன் எனும் இளைஞர் உடனடியாக கால்நடை மருத்தவருக்கு தகவல் தெரிவிக்கவே, மருத்துவர் அங்கு வந்து முதலுதவி சிகிச்சையளிக்கத் தொடங்கினார்.
பின்னர் அருகிலுள்ள கடையில் குடிப்பதற்கு வாட்டர் கேன்களில் கொண்டு வைத்திருந்த குடிநீரை எடுத்து வந்து பசுவின் மீது ஊற்றி அதை மெல்ல ஆசுவாசப்படுத்தி, பசுவின் கால்களில் எண்ணெய் ஊற்றி உருவி விட்டு மருந்துகளையும் உட்செலுத்தினார். நீண்ட போராட்டத்திற்கு பின் பசு சுயநினைவடையத் தொடங்கியது.
மருத்துவர் மற்றும் பொதுமக்களின் உதவியால் எழுந்து நின்ற பசுவால் தொடர்ந்து நடக்க இயலவில்லை. மாட்டின் உரிமையாளர் யாரென தெரியாத சூழலில் திலீபன் மற்றும் மருத்துவரோடு பொதுமக்களும் மாட்டின் உரிமையாளருக்காக நீண்ட நேரமாக சாலையிலேயே காத்திருந்தனர்.
ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்த மாட்டின் உரிமையாளருடன், நிறைமாத கருத்தரித்திருந்த பசுவை உடனடியாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லோடு வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
மனிதர்கள் விபத்தில் சிக்கினாலே, வேடிக்கை பார்த்துச் செல்லும் மக்கள் புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கிய பசுமாட்டிற்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
எனினும் மாட்டின் உரிமையாளர்கள் இரவு நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விடுவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும், கால்நடை சாலையில் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.