அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (19.06.2025) தொடங்கி வைத்தார்.
எச்.ஐ.வி தொற்றினை பூஜ்யமாக கொண்டு வருவதும் – புதிய தொற்று இல்லாமை எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆல் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையும் வகையில் தமிழ்நாடு மாநில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்டஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது அரியலூர் மாவட்டத்தில் 19.06.2025 தொடங்கி 10 நாட்கள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் அரியலூர், செந்துறை, திருமானூர் வட்டாரங்களிலும், மற்றொரு குழுவினர் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் வட்டாரங்களிலும் தொடர்ந்து நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், பறை போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் மூலமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் / மாவட்ட சுகாதார அலுவலர் மரு.மணிவண்ணன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் நலப்பணிகள் மரு.மாரிமுத்து, மாவட்ட திட்ட அலுவலர் மரு.விஜய்பாரதி, மருத்துவ அலுவலர் காசநோய் பிரிவு மரு.ராமச்சந்திரன், மாவட்ட திட்ட மேலாளர்(பொ) சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர், எச்.ஐ.வி சேவைப்பிரிவு தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.